எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்புகளில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் வரை அபராதம்

நிகழாண்டில் எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளில் இருந்து விலகும்பட்சத்தில் அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. அதன் வாயிலாக அந்த இடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், அவ்வாறு கலந்தாய்வில் இடங்களைப் பெற்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிடுவதாக இருந்தால் அதற்கான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அதனைத் தொடர விரும்பாவிட்டால் சனிக்கிழமைக்குள் (ஆக. 3) கல்லூரியில் இருந்து விலகி அந்த இடங்களை திரும்ப ஒப்படைக்கலாம்.

அதேவேளையில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக. 4, 5) கல்லூரியை விட்டு நிற்கும்பட்சத்தில், கலந்தாய்வின்போது அளிக்கப்பட்ட உறுதிச் சான்றின்படி ரூ.1 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 6-ஆம் தேதி அல்லது அதன் பிறகு கல்லூரிகளில் இருந்து விலகுபவர்கள் ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.

 

அதேபோன்று, பி.டி.எஸ். இடங்களைப் பெற்றவர்கள், படிப்பைத் தொடர விரும்பாவிட்டால், ஞாயிற்றுக் கிழமைக்குள் (ஆக. 4) தங்களது இடங்களைத் திரும்ப ஒப்படைக்கலாம். அதே, ஆக. 5 அல்லது 6 -ஆம் தேதிகளில் படிப்பை கைவிடுவதென்றால் ரூ.1 லட்சமும், அதன் பிறகு கல்லூரிகளை விட்டு நின்றால் ரூ.10 லட்சமும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.


Leave a Reply