வேலை வாய்ப்பு அலுவலகங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக தேர்ந்து எடுக்கப்படுவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவிற்கு குறைந்து இருப்பதாக ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் 89 வது ஆண்டு அறிக்கையாக 2017 – 2018 ஆம் ஆண்டுக்கான அறிக்கை சட்ட பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலமாக 53,883 தேர்வு செய்யப்பட்டு அரசு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2013- 2014 ஆம் ஆண்டில் 15,668 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் 2017 – 2018 ஆம் ஆண்டில் 8,117 பேர் பணிஅமர்த்தப்பட்டு உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையத்தின் மூலமாக தேர்ந்து எடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீத அளவிற்கு குறைந்து உள்ளதாகவும், அதே சமயம் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2014- 2015 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்த நிலையில் 2017 – 2018 ஆம் ஆண்டில் 28 சதவீதமாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.