ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் தேர்வாகிய இளைஞர், இளம் பெண்களுக்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பணி நியமன ஆணை வழங்கி பேசியதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம் நடத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

 

அதன்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகரில் எனது முயற்சி மூலம் 2016 -20 2017, 2017 -18 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் உற்பத்தி துறை சேவை துறை, மருத்துவம், செவிலியர் துறை உள்ளிட்ட 63 நிறுவனங்கள் பங்கேற்று எட்டாம் வகுப்பு முதல் பட்டம் படித்த இளைஞர்களை தங்களது நிறுவனங்களுக்கு தெரிவு செய்கின்றனர். இத்தகைய வாய்ப்புகளை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படித்து முடித்தவுடன் நிறுவனங்களில் பணியில் சேரும் பொழுது தொடக்கத்தில் வருமானம் குறைவாக இருக்கலாம். இருப்பினும் இளைஞர்கள் தங்களது ஆர்வம் நிறைந்த துறையில் பணியை தேர்வு செய்து அதில் முழு ஈடுபாட்டுடன் திறனை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

திறமையுள்ள நபராக இருந்தால் உயரும் போது அதற்கேற்றவாறு ஊதியம் உயரும் என பேசினார். விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். கடந்த 2017- 18 ஆம் நிதியாண்டில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகையாக ரூ 1.56 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என பேசினார். இவ்விழாவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் உட்பட அரசு அலுவலர்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply