தஞ்சை மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்குனரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1995 முதல் 1998 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விதிகளுக்கு புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் 1995 முதல் 1998 வரையிலான கால கட்டத்தில் அவர்களின் நியமனம் செல்லாது என உத்தரவிட்ட தொடக்க கல்வி இயக்குநகரகம் 2003 ஜூன் முதல் பணிநியமன ஆணை வழங்கி அன்று முதல் சம்பளத்தை கணக்கிட்டு வழங்க உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில் 42 ஆசிரியர்களில் 12 பேருக்கு அவர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட 1995 முதலான காலத்தை கணக்கில் கொண்டு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்க தொடக்க கல்வி இயக்குனரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ஒரு உத்தரவை தயாரித்து தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரே அரசு கருவூலத்துக்கு அனுப்பியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தஞ்சை திருவாரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உடனடியாக 1 கோடியே 25 லட்சம் ரூபாயை இன்றைய தேதிக்கு கணக்கிட்டு 12 பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து திரும்ப பெற்று ஒப்படைக்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.