தேர்தலில் மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
மக்களவை இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வு பெற்றுள்ளது. இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த தேர்தலில், ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை, மக்கள் உற்று நோக்குகிறார்கள். மோடி என்ன பேசினாலும் ஆணையம் கண்டுகொள்வதில்லை. எனினும், இத்தேர்தலில், மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம்.
பல்வேறு விவகாரகளில் பிரதமர் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் மிகப்பெரிய அளவில் பணத்தை செலவு செய்து உள்ளனர். மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி.
அரசியல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, என்னுடன் ஏன் விவாதம் நடத்த வில்லை? பிரதமர் மோடியின் குடும்பத்தை நான் மதிக்கிறேன். எனது குடும்பத்தை மோடி விமர்சித்ததை பற்றி நான் கவலைப்படவில்லை. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி இருக்கிறோம்.
தேர்தல் முடிய சில நாட்களே உள்ள நிலையில், செய்தியாளர்களை மோடி சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்காக நான் அவரை பாராட்டுகிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.