ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகின்றன.
நாட்டின் மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8, ஜார்க்கண்டில் 3, இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் என 59 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி ஞாயிறன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்வதால் வாக்கு சேகரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் நிலவும் பதற்றமான சூழலால் அங்கு மட்டும் இன்று இரவுக்குள் பிரச்சாரத்தை முடிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளிலும், பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.