கேணிக்கரை பகுதியில், வாகனச்சோதனையின் போது போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக, சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் (39), தலைமையில் போலீசார், இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற சரக்கு வாகனத்திற்கு, ஆய்வாளர் விஜயகாந்த் பூட்டு போட்டுள்ளார். மேலும், வாகன ஓட்டுநரை இறங்குமாறு ஆய்வாளர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த உச்சிபுளி துத்திவலசையை சேர்ந்த ஓட்டுனர் கர்ணன், ஆய்வாளரை கீழே தள்ளினார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கர்ணன், ஆய்வாளர் விஜயகாந்த் கழுத்தில் கடிக்க முயன்றார். சக போலீசார் கர்ணனை பிடித்து B-2 பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காயமடைந்த போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழுத்துப்பகுதியில் 5 தையல் போடப்பட்டுள்ளது. ஓட்டுனர் கர்ணன் (எ) மாரியப்பன் 52, மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.