தமிழ்நாடு, கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்! இலங்கை ராணுவத்தளபதி பகீர் தகவல்

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள்; தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மா நிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக, இலங்கை ராணுவ தளபதி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில், கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதில், கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்பது தெரிய வந்துள்ளதாக, இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

அவர் கூறுகையில், இலங்கையின், எட்டு இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களிலும், பெங்களூருவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

இதை இந்திய பாதுகாப்பு நிறுவனங்களே உறுதி செய்துள்ளன. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகப்படும் பலர் பிடிபட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

 

தமிழகத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக, இலங்கை ராணுவத்தளபதி அதிர்ச்சிகர தகவல் வெளியிட்டிருப்பது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Leave a Reply