ஆந்திராவில், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.
ஆந்திராவில், நடிகர் ராம் சரண் தயாரிப்பில், சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், இந்த படத்தை மூன்று மொழிகளில் எடுக்கிறார்கள்.
இந்த படத்திற்காக, ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி அருகே, கோக்கா பேட்டை என்ற இடத்தில் இருக்கும் சிரஞ்சீவியின் பண்ணை தோட்டத்தில் பிரம்மாண்ட கோட்டை அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று, படப்பிடிப்பு நடந்து வரும் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதேபோல், சென்னை மீனம்பாக்கம் பின்னி மில் வளாகத்தில், விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அது அணைக்கப்பட்டது.