கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக சூலூரில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி அறிமுக கூட்டம் இன்று திருச்சி சாலையில் உள்ள திடலில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம் காலை 10.30 மணியளவில் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.ஆனால்,உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி 11.30 மணியளவில் வந்த காரணத்தால் கூட்டம் சற்று தாமதமாகவே துவங்கியது.
கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசுகையில்- இந்த கோவை மாவட்டத்திலே 50 ஆண்டு கால இல்லாத வளர்ச்சியை அரசு கொடுத்து உள்ளது. கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு உள்ளது.
சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி ஒன்றுமே இந்த தொகுதிக்கு செய்யவில்லை. பல்வேறு தொகுதிகளில் மாறி மாறி தேர்தலில் நிற்கிறார் .
நமக்கு தான் ஒட்டு கேட்க அனைத்து உரிமையும் உள்ளது. திமுகவிற்கு ஓட்டி கேட்க எந்த தகுதியும் இல்லை.
திமுகவினர் ஆட்சியில் இருந்தும் எந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் அனைவரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வரவேற்றார்கள். சிறு எதிர்ப்பு கூட இல்லை. உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதிலும் நல்ல வெற்றி வாய்ப்பை பெற்று தர வேண்டும்.
இந்த தோ்தலில் போட்டியிடுவது, வேட்பாளர் கந்தசாமி மட்டும் வேட்பாளர் அல்ல, ஒவ்வொருவரும் வேட்பாளராக இருந்து தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
ஆனைமலை- நல்லாறு திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரேயிடம் பேசியுள்ளோம், விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவா் பேசினாா்.