திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி தேர்தலில், ஜெயலலிதாவின் படத்துடன் திமுக வேட்பாளர் பா. சரவணன் ஓட்டு கேட்பது போன்ற போஸ்டர், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மே 19இல் நடக்கிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பா. சரவணன் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் பா சரவணனுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசி வழங்குவது போல போஸ்டர் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் திமுக தலைவர்களின் படம் சிறியதாகவும், ஜெயலலிதாவின் படம் மட்டும் பெரியதாகவும் அச்சிடப்பட்டு உள்ளது.
மேலும், ‘என் ஆசியும் ! என் அன்பும் ! உங்களோடுதான். துரோகிகளை தோலுரியுங்கள்’ என்று ஜெயலலிதா கூறுவது போன்ற வாசகங்கள், அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. இது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இது, வேட்பாளர் சரவணனுக்கு தெரிந்து வெளியிடப்பட்டுள்ளதா? அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேறு யாரேனும் செய்திருக்கிறார்களா என்ற சந்தேகம், இரு கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது.