ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து! 13பேர் படுகாயம்; ரயில் சேவைகள் பாதிப்பு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை ரயில் தடம் புரண்டு, அதன் 12 பெட்டிகள் கவிழ்ந்தன; இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
ஹவ்ரா – புதுடெல்லிக்கு பூர்வா எக்ஸ்பிரஸ், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ரூமா என்ற கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தது. அதிகாலை 1 மணியளவில், எதிர்பாராத விதமாக ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்ட இந்த விபத்தில் 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும், ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் மருத்துவ மற்றும் மீட்பு உபகரணங்களுடன் விபத்து பகுதிக்கு மீட்பு வாகனங்கள் விரைந்தன.
இந்த விபத்தால், கிழக்கு ரயில்வே மார்க்கத்தில் இருந்து டெல்லிக்கு வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் பேருந்து மூலமாக கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




