ரூ.1000 முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின் முதல் முறையாக பணம் வரவு வைப்பு
தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ரூ.1000 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என முதலமைச்சர் நேற்று சட்டசபையில் தெரிவித்து இருந்த நிலையில் இன்று 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் நிதிநிலை குறித்த கூட்டம் இன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் முதலமைச்சரின் தனி செயலாளர்கள், நிதித்துறை செயலாளர் சித்திக் உள்ளிட்ட அரசு முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ள நிதி குறித்தும், துறைவாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இந்த மாத தொகையான ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய் திமுக திட்டங்கள் தொடரும் என பேசியிருந்த நிலையில் தற்போது ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகையும் வரவு வைக்கப்படுமா என பலர் எதிர்பார்த்துள்ளனர்.





